Sunday 4 April, 2010

அது ஒரு மழைக்காலம்.


மழை நின்று நெடு நேரம்,

முறிந்த மரக்கிளை கொத்தி சாய்க்க
குருவி துடிக்கும்.

கரை காணாது பயணம் தொடரும்
யாரோ அனுப்பிய காகித கப்பல் .

நனைந்த மேக கூந்தல்.
தூபம் போடும்,
குடிசைகள் அணைத்த சமைத்த நெருப்பு.

உறவு அறுந்து உதறிய
செருப்பு ஒன்று, ஒற்றையாய்  .

ஓநாய்கள் பயமின்றி ஓடும்
நனைந்த ஆடுகள்.

முழுக்க நனைந்தும் முக்காடிட்டு பலர்.

விலக்க மறந்து , வீதியில்
குடை பிடித்து இன்னும் சிலர்.

எல்லாம் ,
அவசரமாய் அடையப்போகும்
அடுத்த மழைக்குள்
கூடு நோக்கி .

எனில் ,
அது ஒரு மழைக்காலம்
.